
சமந்தாவின் சகுந்தலம் படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சமந்தா. தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சமந்தா நடித்திருந்தார். ஆனால், சிறப்பு தோற்றம் தான். அதன் பிறகு பானா காத்தாடி படத்தில் அதர்வா உடன் இணைந்து நடித்திருந்தார். இருவருக்கும் இது முதல் படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதான் என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யனும் குமாரு, அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், பெங்களூர் நாட்கள், தெறி, 24, மெர்சல், இரும்பு திரை, காத்துவாக்குல ரெண்டு காதல் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் தவிர தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சகுந்தலம் மற்றும் குஷி ஆகிய இரு தெலுங்கு படங்களை சமந்தா கைவசம் வைத்துள்ளார். காளிதாஸ் எழுதிய சகுந்தலம் என்ர புராண கதையை மையப்படுத்திய வரலாற்று சிறப்பு மிக்க படமான சகுந்தலம் என்ற படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அனுஷ்காவின் ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குநர் குணசேகரன் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ்மோகன் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி, அனன்யா நகல்லா, மதூ, சச்சின் கடேகர், கபீர் பேடி, கபீர் துகான் சிங் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மணிசர்மா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். குணா டீம் ஓர்க்ஸ் நிறுவனத்தின் மூலமாக நீலிமா குணா இந்தப் படத்தை தயாரித்துள்ளார். தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக இருந்த சகுந்தலம் ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியீட்டிற்கு 10 நாட்கள் உள்ள நிலையில், மீண்டும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது சமந்தாவிற்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது.
